அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை? அறிக்கை தாக்கல் செய்ய, ஐகோர்ட்டு உத்தரவு
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
‘தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர
உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார். இந்தநிலையில் ஐகோர்ட்டு
உத்தரவின்பேரில் நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்த அறிக்கை
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நேற்று நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன்ராமசாமி
ஆகியோர் முன்பு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘பெரும்பாலான
அரசுப்பள்ளிகளில் கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மீதமுள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் நடக்கின்றன. இரவு
காவலர்கள் நியமிக்கவும், நாப்கின் எந்திரங்கள் பொருத்தவும் அரசிடம் அனுமதி
கோரப்பட்டுள்ளது’ என கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து நீதிபதிகள்,
எத்தனை அரசு பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான
பணிகள் நடக்கின்றன? இந்த பணிகள் எப்போது முடியும்? தலைமை ஆசிரியர்,
துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் எவ்வளவு காலியாக உள்ளன? என்பது
குறித்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய
உத்தரவிட்டனர். வழக்கை அடுத்த மாதம் (டிசம்பர்) 20-ந் தேதிக்கு
ஒத்திவைத்தனர்.
Comments
Post a Comment